தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!!!

இளங்கோ அடிகள்



யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று பாரதியாரால் புகழப்பெற்ற முப்பெரும் புலவருள் ஒருவர் இளங்கோ. இளங்கோ சேரவேந்தன் சேரலாதனின் இளைய மகன்; மூத்தவன் சேரன் செங்குட்டுவன். இவர் இளவரசன் ஆதலால் இளங்கோ என அழைக்கப்பட்டார்; துறவு பூண்டதால் அடிகள் என்ற சிறப்புப் பெயருடன் இளங்கோ அடிகள் எனச் சிறப்பிக்கப் பெற்றார். இவர் துறவு பூண்டதற்கான காரணம் என்ன? அடிகளே வரந்தரு காதையில் குறிப்பிடுகிறார்; சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா நடத்தியபோது, தெய்வமாகிய கண்ணகி தேவந்திமேல் வந்து தோன்றி அங்கு வந்திருந்த இளங்கோவடிகளை நோக்கி அவரது உயர் பண்பைப் பாராட்டிப் பேசுகிறாள். அதுமட்டுமன்றி, இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றாலும், அவர் எல்லாச் சமயத்தையும் சமமாக மதித்தவர். எந்தவிடத்தும் அவர் சமயக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. பிற சமயத்தை, சமயத்தினரைப் பழித்ததில்லை. மாறாகப் பிற சமயத்தை - சமயக் கணக்கரைப் போற்றியுள்ளார்.

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான இன்னூல், மாபெரும் கவியான இளங்கோ அடிகளால் தமிழில் இயற்றப்பட்டது. இந்நூல் சங்க காலத்தின் பின் வந்த நீதி நூல் காலத்தில் காலக்கிரம அட்டவணையின்படி 5 – 6 ஆம் நூற்றாண்டுகளில் இளங்கோ அடிகளால் இயற்றப்பட்ட காவியமாகும்.இது இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட காவியம். இப்படைப்பு, புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களை உள்ளடக்கி, 5270 கவிதைவரிகளால் கதை இயம்புவதாய் அமையப்பெற்றுள்ளது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம்.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். சேர , சோழ, பாண்டிய ராஜ்யங்களை உட்படுத்துகையும் , வரலாற்று சம்பவங்களை குறிப்பு சுட்டுகுகையுமாய் அமையப்பெற்றுள்ளது இந்நூலின் சிறப்பாகும் . தமிழ் கலாச்சாரம், அதின் பல்வேறு மதங்கள், பண்பு, மரபு, குடிசிறப்பு, ஆட்சி,கொடை, நகர், ஆடற்கலை, பாடற்கலை முதலியவைகளைப் பற்றிய கவித்துவமான ஒரு விரித்துரை நிரூபணம் இந்நூல் என்றால் அது மிகையாகாது.

சிலப்பதிகாரம் என்ற பெயர் வந்ததன் காரணம்

சிலம்பு ஓர் அணிகலன்; மகளிர் காலில் அணிவது. சிலப்பதிகாரத்தில் இருவர் சிலம்புகள் இடம் பெறுகின்றன. கண்ணகி அணிந்த சிலம்பு ஒன்று; அதன் உள்ளீடு மாணிக்கம்; பாண்டிமாதேவி அணிந்த சிலம்பு ஒன்று; அதன் உள்ளீடு முத்து. இவ் இரு சிலம்புகளால் விளைந்த பூசலே காப்பியக் கதை. இவ்விருவர் சிலம்பும் அழகில், தரத்தில், புற அமைப்பில் ஒரே மாதிரியாக அமைந்ததே இதற்குக் காரணம். எனவேதான் சிலம்பால் விளைந்த அதிகாரம் சிலப்பதிகாரம் ஆயிற்று.
யார் சிலம்பால், விளைந்தது சிலப்பதிகாரம்? கண்ணகி சிலம்பா? பாண்டிமாதேவி சிலம்பா? இது கேள்வி. தேவியின் சிலம்பு அரண்மனைப் பொற்கொல்லனால் திருடப்பட்டு இருக்காவிட்டால் கோவலன் கொலை நடந்திருக்காது. எனவே பாண்டிமாதேவி சிலம்பே காப்பியப் பெயர்க் காரணமானது என்பது பேராசிரியர் .சுப. மாணிக்கனாரது முடிவு. ஆனால் கண்ணகி சிலம்புதான் காப்பியப் பெயரில் இருப்பது என்பது பலரும் ஏற்கும் கருத்து. கண்ணகியே காப்பியத் தலைவி; அவள் கோவலனிடம் தன் சிலம்புகளைக் கொடுத்து இருக்காவிட்டால், இந்தக் கதை மதுரை வரை வந்திராது.

சிலப்பதிகாரத்தின் தோற்றம்

சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியம் என்பது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இதற்கான அடிப்படைச் சான்றுகளில் ஒன்று இளங்கோ சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது. இச்செங்குட்டுவன் சங்க இலக்கியத்தில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பாடப் பட்டவன்; ன் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
அடுத்த சான்று, வரந்தரு காதையில் இடம் பெறும் கண்ணகி வழிபாட்டில் இலங்கை வேந்தன் கயவாகு கலந்து கொண்டான் என்பது. இவன் காலமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது இலங்கை வரலாற்றால் அறியப்படுகிறது. மூன்றாவதாகச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களிலும் இடம்பெறும் பதிகங்களில் ‘‘இளங்கோ சிலம்பு பாடச் சாத்தனார் கேட்டார்’’ எனவும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட இளங்கோ கேட்டார்’’ எனவும் கூறப்பட்டுள்ளன. இங்குக் குறிக்கப் பெறும் சாத்தனார் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பது அறிஞர் கண்ட முடிவு. இவற்றால் சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியம் என்பது உறுதி செய்யப்படுகிறது.

சிலப்பதிகாரத்தின் உள்ளடக்கம் (கதை)

காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும்,அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர்.
கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப்ப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான்.வணிகம் செய்தற்பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி சென்றார்.அவர்,மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்க்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றைக் கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.
பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை ஆரய்ந்து பாராத மன்னன் அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செயப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி; பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள்.மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான்.
மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகர் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்க்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான்.
கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான்.வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது.
அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி,கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்.

நிரைவு செய்க..

சிந்திக்க ஒரு நொடி...